31 March, 2011
ரசித்த நகைச்சுவை
Posted by ஷோபன் at 6:43 pm 0 comments
ஊர்சுற்றி - நந்தி ஹில்ஸ், பெங்களூர்
நந்தி துர்க்கா என்ற நந்தி ஹில்ஸ் பெங்களூரிலிருந்து சுமார் 65 கி.மீ. தொலைவில், பன்னாட்டு விமான நிலையத்திற்கு அடுத்து, சிக்கபேலாப்பூர் மாவட்டத்தில் உள்ளது. நந்தி ஹில்ஸ் என்ற பெயருக்கு பல கதைகள் இருப்பதாக விக்கிபீடியா சொல்கிறது. சோழர்கள் காலத்தில் 'ஆனந்தபுரி' என்றும், யோக நந்தீஸ்வரர் பெயரிலும், திப்பு சுல்தானின் கோட்டை (நந்திகள் காவல் தெய்வங்களாக கருதப்படுவதால் 'நந்தி துர்க்') இருப்பதாலும், அல்லது மிக தொலைவிலிருந்து பார்த்தால் மலையே நந்தி போல் தோன்றுவதாலும் நந்தி ஹில்ஸ் என்று அழைக்கப்படுகிறது. (பெரும்பாலான விபரங்களை விக்கி மற்றும் பல இணையதளங்களிலிருந்து சேகரித்துதான் எழுதுகிறேன்).
பெங்களூர் மெஜஸ்டிக் பேருந்து நிலையத்திலிருந்து KSRTC பேருந்துகள் உள்ளன. காரில் செல்வதானால் - மேக்ரி சர்க்கிள் - பேலஸ் மைதானம் - RT நகர் வழியாக தேவனஹல்லி விமான நிலையம் செல்லும் அருமையான நான்கு வழி எக்ஸ்பிரஸ் சாலை உள்ளது. மலைப்பாதைகளும் நன்றாக இருக்கிறது. நிறைய வளைவுகள் மற்றும் ஏற்றம் அதிகமான பாதைகள். பெங்களூரிலிருந்து கிட்டத்தட்ட 70 கி.மீ. தான் என்பதால் நிறைய நண்பர்கள் இருசக்கர வாகனங்களிலும் வருகிறார்கள் (பெரும்பாலும் காதல் ஜோடிகள்). மாலை 6 மணிக்கு மேல் உள்ளே செல்ல அனுமதியில்லை.
வருடம் முழுக்க போகலாம் என்றாலும், குளிர் காலங்களில் மிக அருமையாக இருக்கும். பிற நாட்களில் அதிகாலை செல்வது நன்றாக இருக்கும், மலையின் மேல் 5 மணிக்கு இருப்பது போல் சென்றால், சூரிய உதயத்தையும், அழகான அதிகாலைப் பனிமூட்டத்தையும் பார்த்து ரசிக்கலாம். அதிகாலை 5 மணி என்பதெல்லாம் நள்ளிரவு என்று என்னைப்போல சொல்பவர்கள் Google Imagesல் படம் பார்த்து ரசிக்கலாம் :-).
ஒரு சிறு குழுவாக நண்பர்களுடனோ அல்லது குடும்பத்தினருடனோ ஒரு நாள் பயணமாக சென்று வருவதற்கு ஏற்ற இடம்.
அடுத்த ஊர்சுற்றியில் குரங்கணி (தேனி மாவட்டம்).
Posted by ஷோபன் at 11:19 am 2 comments
28 March, 2011
இந்த வாரம் - 28 March 2011
சென்ற வாரத்திலிருந்து அடுத்த வாரம் வரை வேலை பெரிதாக ஒன்றும் இல்லாததால், விடுமுறையில் இருக்கிறேன். எங்காவது வெளியில் ஊர் சுற்றலாமென்றால், மனைவிக்கு கைவசம் விடுப்புகள் இல்லை. எனவே நேற்று ஒரு நாள் மட்டும் எங்காவது செல்லலாம் என்று கிளம்பி, நந்தி ஹில்ஸ் (Nandi Hills, Bangalore) சென்றோம். இப்படி ஊர் சுற்றிய அனுபவங்களை 'ஊர் சுற்றி' என்ற தலைப்பில் எழுதலாம் என்று உத்தேசம்.
புத்தகம்
'ஒண்டிக்கட்டை உலகம்' - சிபி.கே.சாலமன் - கிழக்கு பதிப்பகம். 'உங்கள் பேச்சிலர் வாழ்க்கையின் அத்தனை சில்லறைத் தொந்தரவுகளுக்கும் தீர்வு சொல்கிறது இந்தப் புத்தகம்' என்று ஆரம்பிக்கின்ற அட்டையிலிருந்து பின் அட்டை வரை, ஒரு மெல்லிய புன்முறுவலுடன் படித்துக்கொண்டே போகலாம். ஒவ்வொரு அத்தியாயங்களின் தலைப்பே சுவாரஸ்யமாக நம்மை உள்ளே இழுக்கிறது, உதாரணம் - 'என் டான்டெக்ஸ்தான், எனக்கு மட்டும்தான்!' கிட்டத்தட்ட 'Dummies book for Bachelors' :-) போல இருந்தாலும், பழைய ஞாபகங்களை அசைபோட உதவுகிறது. என்னதான் உபயோகமான தகவல்களாக இருந்தாலும் ரூம் மேட் அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்தான் :-).
இ.ரா.முருகனின் 'அரசூர் வம்சம்' படிக்க ஆரம்பித்திருக்கிறேன். ஒரே மூச்சில் படிக்கும் அளவிற்கு புத்தகத்தில் சுவாரஸ்யம் இல்லையா, அல்லது எனக்குதான் அப்படி தோன்றுகிறதா என்று தெரியவில்லை. பார்க்கலாம். படிக்க வேண்டியது நிறைய இருக்கிறது - The Celestine Prophecy by James Redfield, Devil in Pinstripes by Ravi Subramaniyan, என் பெயர் வித்யா - லிவிங் ஸ்மைல் வித்யா மற்றும் சில அமர் சித்திர கதைகள், இந்த வாரத்திற்கு.
சினிமா
நீண்ட நாட்கள் கழித்துதான் பல படங்களை பார்க்கும் வாய்ப்பு கிட்டியது. சென்ற 10 நாட்களில் பார்த்தது-
ஆடுகளம் - இது மனித உணர்வுகள் ஆடும் களம். பேட்டைக்காரர் பாத்திரம் அற்புதம் (பிண்ணனிக் குரல் ராதாரவியாம், வாவ்!). எனக்கு அவரின் மனைவியாக வருபவரின் பாத்திரம் மிகவும் பிடித்திருந்தது (மீனாள்). ஒரு சந்தேகம் - சேவல் சண்டையில் போது சேவலின் காலில் சிறிய கத்தியை கட்டியிருப்பார்கள், நான் நேரில் பார்த்திருக்கிறேன் - இந்த படத்தில் அதை எங்கேயும் காணோம் - ஒருவேளை நான் சரியாக கவனிக்கவில்லையா இல்லை இது ஒருவகையான சேவல் சண்டையா?
காவலன் - பயந்துகொண்டே பார்க்க ஆரம்பித்து, பின் முழுதாகப் பார்த்தேன். அசினா இது, விஜய்யை விட வயதானவராக தெரிகிறார், அசினைவிட வடிவேலுவின் ஜோடியாக வருபவர் நன்றாக இருந்தார் :-) (தீபா?). விஜய்யைப் பற்றியெல்லாம் சொல்லிக்கொள்ள ஒன்றுமில்லை - அப்படி அவசியம் விஜய்யைப் பற்றி ஏதாவது படித்தே ஆகவேண்டுமென்றால் பன்னிக்குட்டி ராமசாமியின் இந்த பதிவைப் படியுங்கள் :-).
Babel - சுவாரஸ்யம் இல்லாமல் பார்க்க ஆரம்பித்து, பின் பார்த்து முடிக்கும் வரை இடத்தை விட்டு எழுந்திடுக்கவே இல்லை. ஒரு கச்சிதமான நான்-லீனியர் திரைக்கதை. மொராக்கோவில், தம்பியாக வரும் சிறுவனும் அவனின் அப்பாவின் நடிப்பும் அற்புதம். முதன்முறையாக துப்பாக்கியை விலை பேசும் போது, விற்பவர் 1000 என்று சொல்வார், அப்பா 500 என்று கேட்கும் போது - ஒரு மெல்லிய சங்கோஜம் கலந்த புன்னகை + துப்பாக்கி வாங்கப் போகிறோம் என்கிற பெருமிதம் எல்லாம் கலந்த ஒரு முகபாவம், அற்புதம்.
ரசித்த நகைச்சுவை
சென்ற வாரம், என் மனைவியை அழைத்துக்கொண்டு வருவதற்காக செயின்ட் ஜான்ஸ் மருத்துவமனைக்கு சென்றிடுந்தேன். அப்போது கேண்டீனில் ஒரு கணவன் மனைவி பேசிக்கொண்டதை கேட்டது.
"என்னங்க பெங்களூர்ல வெயில் இந்த போடு போடுது. ஏங்க கழுதைக்கும் கழுதைக்கும் கல்யாணம் பண்ணி வச்சா மழை பெய்யும்னு சொல்றாங்களே, அது உண்மையாங்க?"
கணவர் நக்கலாக, "இருக்கலாம்...உன் தங்கச்சி கல்யாணத்தன்னிக்கு மழை பேஞ்சதே".....ஒன்றும் புரியாமல் முழித்து பின் லேட்டாக புரிந்து கொண்டு மனைவி முறைக்க...நான் எஸ்கேப்.
ரசித்த பதிவு
கேபிள் சங்கரின் நான்-ஷர்மி-வைரம். ஆண் விபச்சாரம் பற்றி யாராவது எழுதுவார்களா என்று நீண்ட நாட்களாக எதிர்பார்த்துக் கொண்டிருந்தபோது, இனிய அதிர்ச்சியாக இந்த பதிவு. இப்படியெல்லாம் நடக்கிறதா என்று ஆச்சர்யமாய்/அதிர்ச்சியாய் பார்ப்பவர்களுக்கு: பெங்களூரின் டைம்ஸ் ஆஃப் இந்தியா-பெங்களூர் மிரர் போன்ற நாளிதழ்களில் வரும் வரி விளம்பரங்களைப் பாருங்கள்!
செங்கோவியின் சி.வி.(Resume) தயாரிப்பது எப்படி? - மிகவும் உபயோகமான பதிவு. அவரின் பதிவில் நான் இட்ட பின்னூட்டத்தை இங்கும் பதிகிறேன், எனது பதிவுகளையும் யாரேனும் படித்தால் பயன்படும்.
அன்பு செங்கோவி, உபயோகமான பதிவு. எனக்கு தெரிந்த சில டிப்ஸ்-
முதலில் நாம் முடிவு செய்ய வேண்டியது நாம் Resume தயார் செய்ய வேண்டுமா அல்லது CV தயார் செய்ய வேண்டுமா என்பது.
1. பொதுவாக Resume என்பது 1 அல்லது 2 பக்கங்களில் நம்முடைய வேலை அனுபவம், கல்வித்தகுதி மற்றும் special skill sets/ computer skills போன்றவை - எவ்வளவு சுருக்கமாக தர முடியுமோ அவ்வளவு நலம்.
2. CV என்பது சற்றே விரிவான (at least 3 pages) கல்வித்தகுதிகள், ஆராய்ச்சி மற்றும்/அல்லது ஆசிரியப் பணி அனுபவம், conference/journal publications, etc போன்றவை பற்றி ஒரு குறு அறிமுகம். CV - பொதுவாக கல்லூரி பணி, ஆராய்ச்சிப் பணி போன்ற பணிகளுக்கு CV உகந்தது, Resume அல்ல. எனவே, வேலைக்குத் தகுந்த CV/ Resume தயார் செய்வது அவசியம்.
3. Resume/CV top right headerல் "Resume of Sengovi" or "CV of Sengovi" என்று 2ம் பக்கத்திலிருந்து தருவதும் நல்லது. ஒருவேளை நீளமான பெயர் இருந்தால் முதல் பெயர் மட்டும் உசிதம்(உம்: அய்யம்பேட்டை அறிவுடை நம்பி கலியபெருமாள் சந்திரன் - "Resume of Chandran" போதும்).
4. Standard Font style உபயோகியுங்கள் (Arial/ Times New Roman) - fancy font களை தவிருங்கள்.
5. Skills போன்றவற்றை எழுதும் போது, குறைந்த பட்சம் அதைப் பற்றி தெரிந்த்தால் மட்டும் குறிப்பிடவும் - வேலைக்கு சேர்ந்த பின் படித்துக் கொள்ளலாம் என்றால் வேலைக்கே ஆகாது :-). LS DYNA தெரியும் என்று போட்டுவிட்டு, கேட்டால் 'தெருவில் போகும் போது விளம்பரம் பார்த்திருக்கிறேன்' என்று வழியக்கூடாது ;-) தெரியாதென்றால் தெரியாது என்று நேர்மையாக ஒத்துக்கொள்வது மிக நல்லது.
6. கேட்டால் ஒழிய புகைப்படம் தேவையில்லை.
7. கேட்டால் ஒழிய Referencesம் தேவையில்லை.
8. முக்கியமாக - நீங்கள் நேரில் சென்று கொடுக்கும் அல்லது hard copy யாக அனுப்பும் Resumeல் மட்டும் Declaration என்னும் 'நான் சொல்வதெல்லாம் உண்மை, உண்மையைத் தவிர வேறோன்றுமில்லை :-) பகுதியை இணைத்து கையொப்பமிடலாம். Email or Online application களில் இது தேவையில்லை.
9. உபயோகத்தில் உள்ள email address and Phone number கொடுக்கவும். Decent ஆன readable email ID யாக இருத்தல் நலம் (உம்: பட்டாசுபாலு@சிவகாசி.com ;-)
10. கடைசியாக, உங்கள் Resume/CV யை அனுப்பப்போகும் கம்பெனியின் HR ஸ்தானத்திலிருந்த்து உங்கள் Resumeஐ படித்துப் பாருங்கள் - உங்களுக்கு திருப்தி அளிக்கும் வகையில் இருந்த்தாலொழிய அனுப்ப வேண்டாம், சிறிய திருத்தங்ககள் செய்த பின் அனுப்பவும். தயவுசெய்து spelling mistakes இல்லாமல் அனுப்பவும்.
வாழ்த்துக்கள்!
அடுத்த வாரம் பார்க்கலாம்,
-ஷோபன்
Posted by ஷோபன் at 7:00 pm 0 comments
Labels: இந்த வாரம், சினிமா, நகைச்சுவை, பொது
21 March, 2011
பிச்சைக்காரர்களின் தேசம்
நான் சராசரியாக நாளொன்றுக்கு 18-20 மணி நேரம் உழைக்கிறேன். என்னுடைய மாத சம்பளத்திலிருந்து பைசா சுத்தமாக கணக்கு பண்ணி வருமான வரி அரசாங்கத்திற்கு போகிறது. இதுவரை வருமான வரி ஏய்ப்பு செய்ததில்லை, செய்யவும் முடியாது - காரணம், அலுவலகங்களிலேயே வரி மற்றும் இதர பிடிப்புகள் போகத்தான் சம்பளம் கணக்கிற்கு வருகிறது. கிட்டத்தட்ட நான்கில் ஒரு பங்கு அல்லது ஐந்தில் ஒரு பங்கு வரியாகப் போகிறது. நான் மட்டுமல்ல, என்னைப்போல் ஐ.டி. யில், மென்பொருள் துறையில், கன்சல்டிங்கில், உற்பத்தித்துறையில்...என அனைவரின் உழைப்பின் ஒரு பகுதி வரியாக அரசாங்கத்திற்குப் போகிறது. அரசாங்க கஜானாவின் ஒரு பகுதி நம் வரிப்பணத்தால்தான் நிறைகிறது. நிற்க.
இதெல்லாம் இப்படியிருக்க, இவர்கள் விடும் தேர்தல் அறிக்கைகள் மற்றும் வாக்குறுதிகளைப் பார்க்கும்போதெல்லாம் பற்றிக்கொண்டு வருகிறது. எல்லாம் இலவசம் - டி.வி. இலவசம், மிக்ஸி இலவசம், கிரைண்டர் இலவசம், ...ஜட்டியும் கூட இலவசம். ஏண்டா டேய்...நாங்க உழைச்சு உழைச்சு வரியாக் கொட்டுவோம், நீங்க மசுரே போச்சுனு 'ஊரான் வீட்டு நெய்யே, என் பொண்டாட்டிங்க கையே'னு ஊருக்கெல்லாம் இலவசமா குடுப்பீங்களா? இன்னும் எத்தனை நாட்களுக்கு எங்களை பிச்சைக்காரர்களாகவே வைத்திருக்க உத்தேசம்.
எத்தனையோ கிராமங்களில் மின்சார வசதி இல்லை, நல்ல சாலை வசதி இல்லை, குறைந்த பட்ச மருத்துவ வசதிகள் இல்லை, குடி நீர் இல்லை, குண்டி கழுவ தண்ணீர் இல்லை...கழுவ என்ன கழுவ...முதலில் நல்ல கழிப்பிட வசதியில்லை. பெரு நகரங்களில் மட்டும் என்ன, நல்ல பொதுக்கழிப்பிடங்கள் இருக்கிறதா? பெரிதாய்ப் பீற்றிக் கொண்டு தேர்தல் வாக்குறுதிகளை விடும் பெருந்தலைவர்களே, உங்களால் ஒரே ஒருவேளை இந்த பொதுக்கழிப்பிடங்களை உபயோகப்படுத்த முடியுமா? அப்புறம் என்ன இழவிற்கு இலவச லேப்-டாப்பும் இலவச மிக்ஸியும்?
ஐயா பெருந்தலைவர்களே, எங்களுக்கு எல்லாவற்றையும் இலவசமாகவே தந்து எங்களைக் கேவலப்படுத்தாமல், இவை எல்லாவற்றையும் எங்கள் உழைப்பால் நாங்களாகவே வாங்கிக்கொள்ளும் அளவிற்கு எங்கள் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துங்கள், அதற்கான சமூக, பொருளாதார மாற்றங்க்களை கொண்டு வாருங்கள். எனக்கு எந்த கட்சி இலவசமாக மிக்ஸி கொடுக்கிறது என்று பார்ப்பதை விட, எந்த பிராண்ட் மிக்ஸி எனக்குத் தேவை என்று நானே பார்த்து வாங்கிக்கொள்ளும் அளவிற்கு என் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தினால், உங்களுக்கு புண்ணியமாய்ப் போகும்.
இவர்களைச் சொல்லியும் குற்றமில்லை, நம் மக்களை சொல்ல வேண்டும். எனக்கு பிச்சைக்காரனாகவே இருப்பதுதான் பிடிக்கிறது என்பவர்களை என்ன செய்வது. பொருளாதார அறிவியலில் ஒன்று சொல்வார்கள் - 'there is no such thing as a free lunch' - இந்த உலகில் இலவசம் என்று ஒன்று கிடையாது. நீங்கள் வாங்கும் ஒவ்வொரு இலவசமும் இன்னொருவரின் உழைப்பால் வந்தது என்பதை ஞாபகம் வைத்துக்கொள்ளுங்கள். இலவச டி.வி.களும், மிக்ஸிகளும் உங்களை மகிழ்விக்குமேயானால், நீங்களும் ஒரு வகையில் திருடர்கள்தான் என்பதையும் ஞாபகம் வைத்துக்கொள்ளுங்கள்.
-- ஷோபன்
Posted by ஷோபன் at 12:12 pm 9 comments
18 March, 2011
இந்த வாரம் - 18 March 2011
இந்த வாரம் - 18 March 2011
இந்த வாரம் என்ற தலைப்பில் நான் ரசித்த, பார்த்த, படித்த விஷயங்களை எழுத உத்தேசம்.
புத்தகங்கள்...
- ராஜீவ் கொலை வழக்கு - ரகோத்தமன் - கிழக்கு பதிப்பகம்.
- விடுதலைப் புலிகள் - மருதன் - கிழக்கு பதிப்பகம்.
- பிரபாகரன் வாழ்வும் மரணமும் - பா.ராகவன் - கிழக்கு பதிப்பகம்.
என் நண்பர் ஒருவரின் பரிந்துரையின் பேரில் ராஜீவ் புத்தகத்தை வாங்கலாம் என்று கிழக்கை கிளிக்கிய போது ஒரு அருமையான தள்ளுபடி பற்றிய விளம்பரம் கண்டேன் (இருபது புத்தகங்கள் ஆயிரம் ரூபாய்). அந்த சலுகையில் வாங்கிய புத்தகங்கள்தான் இவை. மேலே குறிப்பிட்ட வரிசையில்தான் அவற்றை படித்தேன் - இது எதேச்சையானதுதான், ஆனால் சுவாரஸ்யமாக இருந்தது.
ராஜீவ் கொலை வழக்கு - அருமையாக் எழுதப்பட்ட புத்தகம் என்பதைவிட இது ஒரு அருமையான ஆவணம். அட்டை-முதல்-அட்டை-வரை விறுவிறுப்பிற்கு பஞ்சமில்லை. விடுதலைப் புலிகளின் திட்டமிடல், சுய கட்டுப்பாடு, அவர்களின் நெட்வொர்க் போன்றவை வியப்படைய வைக்கின்றன. எதற்காக இப்படி ஒரு கொலை - அடுத்த புத்தகத்தில் விரிவாக இருக்கிறது.
ராஜீவ் கொலை வழக்கை ஆரம்பமாக வைத்து, விடுதலைப் புலிகளின் தோற்றம், வளர்ச்சி பற்றி விரிவாக அலசுகிறார் மருதன். என்னைப் போல ஈழம் பற்றிய பிரச்சினைகளை முழுதும் தெரியாத தற்குறிகளுக்கு இந்த புத்தகம் ஒரு நல்ல ஆரம்பம். எந்த ஒரு இயக்கமாக இருந்தாலும் அதற்கு ஆணி வேராக ஒருவர் இருக்க வேண்டுமே - அடுத்த புத்தகத்தில் இன்னும் விரிவாக இருக்கிறது.
பிரபாகரன் என்ற மாபெரும் போராளியைப் பற்றியும், தமிழ் ஈழ பிரச்சினை பற்றியும் 206 பக்கங்களுக்குள் எழுதுவது என்பது சவால்தான் - பா.ராகவன் மிகத் திறமையாக, கிட்டத்தட்ட அனைத்து விஷயங்களையும் தொட்டுச் செல்கிறார். இந்த மூன்று புத்தகங்களும் ஒரு அருமையான தொகுப்பு, அவசியம் உங்கள் புத்தக அலமாரியில் இருக்கலாம்.
செவிக்கு உணவில்லாத போது...
சென்ற இரண்டு வாரங்களாக ஒரு அமெரிக்கன் கிளையண்டிற்கான மேனேஜ்மென்ட் கன்சல்ட்டிங் (அப்படி என்றால் என்னவென்று கடைசியில்) வேலையால் அலுவலகத்தில் இரவு நீண்ட நேரம் இருக்க வேண்டியதானது. ஒரு நாள் இரவு உணவிற்கு, டாமினோஸ் பீட்ஸா - டபுள் பர்ஸ்ட் ஆர்டர் செய்தேன் - ம்ம்ம் சூப்பர்...
ரசித்த பதிவு...
ரெட்டைவாலின் இந்த பதிவு - நன்றி ரெட்டைவால்.
ரசித்த பாடல்...
எவண்டி உன்ன பெத்தான்...கைல கிடைச்சா செத்தான். இந்த லிங்க்கில் இருக்கும் முதல் கமெண்ட் பாடலை விட அருமை.
- உன்ன பார்த்த ஃபர்ஸ்ட் செகண்ட்ல 'கல்ல' காணோம்....தேடிப்பாக்குறேன் உங்கப்பன் டி.ஆர்-ஐயும் காணோம்... :-)
மேனேஜ்மென்ட் கன்சல்ட்டன்சி....
.....என்றால், உங்களுக்கு என்ன பிரச்சினை என்பதை உங்களிடமே கேட்டு, அதற்கான தீர்வையும் உங்களிடமிருந்தே கறந்து, அதை அழகாக ஜிகினா ஒட்டி, பார்சல் பண்ணி உங்களுக்கு கொடுத்தால்...நான் செய்வதற்குப் பேர்தான் மேனேஜ்மென்ட் கன்சல்டன்சி, நீங்கள் செய்வதற்குப் பேர்தான் 'சொந்த செலவில் சூனியம் வைத்துக்கொள்வது' ;-)
அடுத்த வாரம் பார்க்கலாம்.
-ஷோபன்
Posted by ஷோபன் at 11:51 pm 3 comments
Labels: இந்த வாரம்
மீண்டு(ம்) நான்
தமிழ் கூறும் நல்லுலகத்திற்கு வணக்கம். நானும் வலைப்பூ ஆரம்பிக்கிறேன் பேர்வழி என்று சுமார் நான்கு வருடங்களுக்கு முன்பு ஆரம்பித்தது இது. எழுத ஆரம்பித்த பிறகுதான் தெரிந்தது, இது சாதாரண வேலையில்லை, குறைந்தபட்ச உழைப்பாவது தேவை என்று. வெறுமனே வந்து ஜல்லியடித்துவிட்டுப் போவதில் எனக்கு உடன்பாடு இல்லை. அப்போதிருந்து பிற வலைப்பதிவுகளை படிப்பதோடு சரி.
அதெல்லாம் சரி, இப்போது எதற்கு மீண்டும் என்று கேட்கிறீர்களா? வேலைப்பளு மிக அதிகமாகி விட்டது - ஒரு வடிகாலாக இந்த வலைப்பூவை மீண்டும் உபயோகிக்க ஆரம்பித்திருக்கிறேன். குறைந்தபட்சம் வாரம் ஒரு பதிவாவது இட முடியுமா என்று பார்க்கலாம். எனக்கு அவ்வளவு நன்றாக எழுத வராது, பரவாயில்லை, எழுதிப்பழகலாம் - ஒரு சினிமாவைப் பற்றியோ, அழகான பாடலைப் பற்றியோ, நல்ல புத்தகத்தைப் பற்றியோ, தொழில் துறை/ நுட்பங்களைப் பற்றியோ - எதையாவது எழுதிப்பார்ப்போம்....
....பார்போம், எவ்வளவு நாள் இது தொடர்கிறது என்று.
-ஷோபன்
Posted by ஷோபன் at 11:00 pm 4 comments
Labels: பொது வணக்கம்